7 முறை மிஸ்டர் இந்தியா... மயங்க் பவார் காலமானார்.. 37 வயதில் பெரும் அதிர்ச்சி!
தன்னம்பிக்கைக்கும், கட்டுக்கோப்பான உடலமைப்புக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த மயங்க் பவார் கடந்த பிப்ரவரி 23ம் தேதி எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு இந்திய ஃபிட்னஸ் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடிபில்டிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட மயங்க், தேசிய அளவில் 7 முறை 'மிஸ்டர் இந்தியா' பட்டம் வென்று சாதனை படைத்தவர். செலிபிரிட்டி ஃபிட்னஸ் பயிற்சியாளராகவும் பலருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். 2014-ம் ஆண்டு ஒளிபரப்பான 'எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா 7' ரியாலிட்டி ஷோ மூலம் இவர் நாடு முழுவதும் பிரபலம் அடைந்தார். அந்நிகழ்ச்சியில் இவரது அமைதியான குணமும், நேர்மறையான அணுகுமுறையும் பலரைக் கவர்ந்தது. அவர் அந்தப் போட்டியில் இருந்து வெளியேறும்போது தொகுப்பாளர் சன்னி லியோன் கண்ணீர் விட்டு அழுதது இப்போதும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது.
இவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி, இன்று பிப்ரவரி 25, 2026, புதன்கிழமை மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை டெல்லியில் உள்ள ராணா பிரதாப் பாக், சங்கம் பூங்காவில் உள்ள வால்மீகி கோவிலில் அஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது.
மயங்க் பவாரின் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் அவரது குடும்பத்தினரால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், 37 வயதிலேயே அவர் உயிரிழந்தது ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த விவாதங்களைச் சமூக வலைத்தளங்களில் எழுப்பியுள்ளது. அவரது மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அவர் ஒரு சகோதரராக, சாம்பியனாக, வழிகாட்டியாக மற்றும் பலருக்கு உத்வேகமாகத் திகழ்ந்தார். அவர் எப்போதும் எங்கள் இதயங்களில் வாழ்வார்" என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளனர்.