கல்விக்கு  வயது தடையில்லை... 81-வது வயதில் முதுகலை பட்டம் பெற்ற முன்னாள் ராணுவ வீரர்!

 

 

ஹரியானா: கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது 81-வது வயதில் முதுகலைப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். 76 வயதில் தனது உயர்கல்விப் பயணத்தை தொடங்கிய லால் சந்த் கோதாரா, தற்போது முதுகலைப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.ஹரியானா மாநிலம் சிர்சா பகுதியைச் சேர்ந்தவர் லால் சந்த் கோதாரா. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இவர், ராணுவப் பணிக்குப் பிறகு போக்குவரத்துத் துறையில் யார்டு மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

ஓய்வுக்குப் பிறகு கல்வி மீதான தனது ஆர்வத்தை மீண்டும் தொடர முடிவு செய்த லால் சந்த் கோதாரா, தனது 76-வது வயதில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (IGNOU) சேர்ந்து படிக்கத் தொடங்கினார்.பொதுவாக ஓய்வுக்குப் பிறகு பலரும் கல்வியைத் தொடர தயங்கும் நிலையில், லால் சந்த் கோதாரா தனது வயதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து படித்து வந்தார். இதன் பலனாக கடந்த 2023-ம் ஆண்டு தனது இளங்கலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

இதையடுத்து தனது கல்விப் பயணத்தை மேலும் தொடர்ந்த அவர், முதுகலைப் படிப்பிலும் சேர்ந்தார். தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட கல்வி முயற்சியின் முடிவாக, தனது 81-வது வயதில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.கல்வியுடன் மட்டும் நின்றுவிடாமல் விளையாட்டுத் துறையிலும் லால் சந்த் கோதாராவுக்கு ஆர்வம் இருந்து வருகிறது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று அவர் பல பதக்கங்களை வென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ராணுவப் பணி, போக்குவரத்துத் துறையில் வேலை, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பு என பல்வேறு துறைகளில் செயல்பட்டுள்ள லால் சந்த் கோதாரா, ஓய்வுக்குப் பிறகும் கற்றலை கைவிடாமல் தொடர்ந்து கல்வி கற்று வருகிறார்.81-வது வயதில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது எதுவாக இருந்தாலும் ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு லால் சந்த் கோதாராவின் கல்விப் பயணம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.