நில ஆக்கிரமிப்பு விவகாரம் - பிரதமர் மோடியைச் சந்தித்து மனு அளித்த  81 வயது பள்ளித் தோழர்!

 

தனக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு, குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள பள்ளியில் தன்னுடன் படித்த பள்ளித் தோழரான பிரதமர் நரேந்திர மோடியை 81 வயது முதியவர் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மீரா ரோடு பகுதியில் வசித்து வரும் அஸ்கராலி வோரா (81), பிரதமர் மோடியுடன் சிறுவயதில் வட்நகரில் உள்ள பி.என். பள்ளியில் ஒன்றாகப் படித்தவர் ஆவார். இவர் கடந்த 1989-ஆம் ஆண்டு பயந்தர் கிழக்குப் பகுதியில் 2,810 சதுர மீட்டர் நிலத்தைச் சட்டப்பூர்வமாக விலைக்கு வாங்கியிருந்தார்.

ஆனால், கடந்த 2011-ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தாவுடன் தொடர்புடைய நிறுவனங்களால் தனது நிலம் ஏமாற்றி ஆக்கிரமிக்கப்பட்டதாக வோரா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கடந்த 2015-ஆம் ஆண்டு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக வருவாய்த் துறை மற்றும் காவல் நிலையங்களில் முறையிட்டும் எத்தகைய தீர்வும் கிடைக்காத நிலையில், கடந்த செப்டம்பர் 8-ம் தேதியன்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அவர் மனு அளித்தார். இந்த விவகாரம் குறித்து விரிவான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமரைச் சந்தித்ததைத் தொடர்ந்து அவர் அளித்த நேர்மறையான பதிலால் தனக்கு விரைவில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அஸ்கராலி வோரா தெரிவித்துள்ளார்.