84 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள்... கேரளாவில் அதிர்ச்சி!

 

கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 140 வேட்பாளர்களில் 135 பேரின் சுய அறிவிப்பு பிரமாண பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில் மொத்தம் 114 எம்.எல்.ஏ.க்கள் அதாவது 84 சதவீதத்தினர் தங்களுக்கு எதிராகக் குற்ற வழக்குகள் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். இது கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விட தற்போது அதிகரித்துள்ளதாக அந்தத் திடுக்கிடும் அறிக்கை தெரிவிக்கிறது.

வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 77 பேரில் 57 சதவீதத்தினர் மிகவும் தீவிரமான குற்ற வழக்குகளைத் தங்களது பெயரில் எதிர்கொண்டு வருகின்றனர். இதில் கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற கொடூரமான குற்றச்சாட்டுகள் அடங்கியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இத்தனை பேர் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருப்பது ஜனநாயகத்தின் மீதான கவலையை அதிகரித்துள்ளது.

மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளும் பதிவாகியுள்ளது அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தங்களது தொகுதிகளில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்களே இத்தகைய வழக்குகளில் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இந்த அதிர்ச்சித் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.