டெல்லி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

 

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், மூன்று குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு டெல்லியின் பாலம் பகுதியில் உள்ள ஒரு நான்கு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை சுமார் 7 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. குறுகிய கால இடைவெளியில் தீ மற்ற தளங்களுக்கும் வேகமாகப் பரவியது. தகவல் அறிந்தவுடன் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

அதிகாலை நேரம் என்பதால் குடியிருப்பவாசிகள் உறக்கத்திலிருந்த நிலையில், தீயும் புகையும் சூழ்ந்ததில் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீயில் இருந்து தப்பிக்க மேல் மாடியிலிருந்து குதித்த இருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவத்திற்கு முதல்வர் ரேகா குப்தா இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும், கட்டிடத்தில் முறையான தீயணைப்புப் பாதுகாப்பு வசதிகள் இருந்ததா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.