2 குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய்... குழந்தைகள் பலி.. தாய்க்கு சிகிச்சை !

 

இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் அதை குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் குழந்தைகள் உயிரிழந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கிருஷ்ணகிரி அருகே கெட்டூர் பகுதியில் முத்துராஜ் - கௌரி ( 26) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு  முன் திருமணம் நடந்துள்ளது. ,இந்த தம்பதிக்கு ஜீவன் 4 என்ற வயது மகனும், பாவனா ஸ்ரீ என்ற 2 வயது மகளும் உள்ளனர். முத்துராஜ் கடந்த ஒரு மாத காலமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த, 17ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் கணவர் முத்துராஜிடம் கோபித்த மனைவி கௌரி, செந்தாரப்பள்ளியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு, குழந்தைகளுடன் 
சென்றுள்ளார். 

குடும்ப பிரச்னையால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர், இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் இரு குழந்தைகளுக்கும் விஷம் 
கொடுத்து தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த மூவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தைகள் ஜீவன் மற்றும் பாவனா ஸ்ரீ இருவரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கௌரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  
குடும்ப பிரச்னையில் விஷம் கொடுத்து இரு குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.