தலைக்கேறிய போதை... 60 அடி உயரத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த இளைஞர் !

 

மது போதையில் 60 அடி உயரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர் காயங்களுடன் மீட்கப்பட்டார். 

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மேம்பாலம் ஒன்று உள்ளது. சுமார் 60 அடி உயரத்தில் உள்ள அந்த பாலத்தில் இருந்து ஒருவர் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனை கண்ட மக்கள் குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பார்த்தப்போது உடலில் சிறு காயங்களுடன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிருக்கு போராடியபடி கிடந்தது தெரியவந்தது. மேலும் அவர் மதுபோதையில் இருந்துள்ளார். 

உடனே தீயணைப்பு துறையினர் அந்த நபரை மீட்டு மேலே கொண்டு வர, உயரம் அதிகமாக இருந்ததால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஸ்ட்ரெட்ச்சரில் சுமந்து வந்து மேல் பகுதிக்கு கொண்டு வந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் தவறி விழுந்த நபர் மருதங்கோடு பகுதியை சேர்ந்த சிங் (45) என்பதும், ரயில்வே பாலத்தின் மேல் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் மேல் மது போதையில் இருந்ததால் தவறி விழுந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. அவர் தண்டவாளத்தில் விழுந்துகிடந்த நேரத்தில் ரயில் சென்றிருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.