உ.பி.யில் கொடூரம்.. பாரத மாதா சிலைக்கு மாலைபோட சென்ற தலித் மாணவர் மீது தாக்குதல்.!!

 

பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற தலித் மாணவனை சிலர் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரை சேர்ந்த அர்ஜூன் ராணா என்ற தலித் மாணவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அங்குள்ள பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றார். இதை மாற்று சமூக மாணவர்கள் சிலர் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்போது முன்விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மைதானத்தில் அர்ஜூன் ராணா தனியாக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மாற்று சமூக மாணவர்கள், அர்ஜூன் ராணாவை சரமாரியாக தாக்கினர். கட்டை, கற்கள் கொண்டும் கொடூரமாக தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த அவர் நிலைகுலைந்து விழுந்தார். பின்னர் அவரை மீட்ட சக மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த கொடூர தாக்குதல் சம்பவம் அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலை நடத்திய ஷபாஸ் யாதவ், சூர்யன்ஷ் தாகூர் உள்ளிட்ட மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முதலில் பாரத மாத சிலைக்கு அர்ஜூன் ராணா 'ஷூ' அணிந்து கொண்டு மாலை அணிவிக்க சென்றதாக கூறி தடுத்ததாக தாக்குதல் நடத்திய தரப்பு மாணவர்கள் கூறுகின்றனர். எனினும் கொடூர தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.