சபரிமலையில் அனைத்து வயது பெண்கள் அனுமதி குறித்த சர்ச்சை… கேரள அரசின் உத்தரவு வாபஸ்…

 

சபரிமலையில் 10 வயதுக்கு கீழும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வழிகாட்டு நெறிமுறை புத்தகத்தில் தவறாக அச்சடிக்கப்பட்டுவிட்டதாகவும் கேரள தேவசம் போர்டு அமைச்சர்  ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.  சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக 50 வயதுக்குட்பட்ட பெண்களால் சபரி மலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இதுவரை அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதனிடையே வருடாந்திர மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இந்நிலையில்  உச்சநீதிமன்ற உத்தரவு அமலுக்கு வந்துள்ளதாகவும், இதையடுத்து, சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியானது.   மேலும் சபரிமலையில் 1,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஒரு புத்தகம் வழங்கப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அறிவுறுத்தல் தவறுதலாக அச்சடிக்கப்பட்டதாகக் கூறி இதனை கேரள அரசு வாபஸ் பெற்றுள்ளது. சபரிமலையில் 10 வயதுக்கு கீழும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் புத்தகத்தில் தவறாக அச்சடிக்கப்பட்டுவிட்டதாகவும் கேரள தேவசம் போர்டு அமைச்சர்  ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 10 வயதுக்கு கீழும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.