மகள் காதல் திருமணம்.. மனமுடைந்த பெற்றோர் விபரீத முடிவு !!

 

மாற்று சமூகத்து இளைஞரை மகள் திருமணம் செய்ததால் மனமுடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் சின்னத்துரை - சங்கரம்மாள் தம்பதி வசித்து வந்தனர். இவரது மகளுக்கும் புதுப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் காளிமுத்து என்பவருக்கும் இடையே  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இதனையடுத்து இருவரும் தீவிரமாக காதலிக்கத் தொடங்கினர்.

பின்னர் இவர்களின் மகளின் காதல் விவகாரம் சின்னத்துரை - சங்கரம்மாள் தம்பதிக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அப்பெண் காதலனை கரம்பிடிப்பதில் உறுதியாக இருந்துள்ளார். 

இந்த நிலையில், இளம்பெண் பெற்றோரை உதறிவிட்டு காதலன் காளிமுத்துவை திருமணம் செய்துக்கொள்ள, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த தகவல் சின்னத்துரை - சங்கரம்மாள் தம்பதிக்கு தெரியவந்து மனமுடைந்தனர். இதனால் அவர்கள் வீட்டில் பெரும் சோகத்துடன் காணப்பட்டனர். இதனால் அவர்கள் விபரீத முடிவு எடுத்தனர்.

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணின் தாய் சங்கரம்மாள் வீட்டில் தூக்கிட்டும், தந்தை சின்னத்துரை அடைக்கலாபுரம் என்ற இடத்தில் விஷம் அருந்தியும் தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேறு சாதி இளைஞரை மகள் காதல் திருமணம் செய்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.