கமலாலயத்தில் காத்திருக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ்.. கலாய்த்த அமைச்சர் உதயநிதி !!

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இடையே போட்டி உள்ளது. கிட்டதட்ட சுயேட்சை சின்னத்தில் இருவரும் போட்டியிடுவது உறுதியான நிலையில், கூட்டணி கட்சியினர் ஆதரவை பெற முயன்று வருகின்றனர். அந்த வகையில்,இரு அணியினரும் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் சென்றனர். அங்கு இரு அணியினரும் காத்திருந்து அண்ணாமலையை சந்தித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்தது. 

இந்த நிலையில், சென்னை ஓட்டேரி குயப்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.6.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிஞர் அண்ணா மாளிகை என்ற பெயரிலான சமுதாய நலக்கூடத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர் 9 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் கூடிய திருமணத்தையும் நடத்தி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நேரு ஸ்டேடியம் கட்டும்போது அப்புறப்படுத்தப்பட்ட 100 குடும்பங்கள் கண்ணப்பர் திடலில் வசிக்கின்றனர். அந்த மக்களுக்கு விரைவில் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது என்றார். 

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் போல் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து விடாதீர்கள். என்னுடைய காரில் தவறுதலாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஏறச் சென்றார்கள். ஆனால், அப்போது காரில் ஏறினாலும் பரவாயில்லை. கமலாலயத்திற்கு மட்டும் சென்று விடாதீர்கள் என்று சொன்னேன். 

ஆனால், சட்டமன்றத்தில் எந்த காலத்திலும் எங்கள் கார் கமலாலயம் போகாது என ஓ.பன்னீர்செல்வம் சொன்னார். ஆனால், இரண்டு மணி நேரம் கார் கமலாலயத்தில்தான் இருந்தது. இரண்டு பேரும் போட்டிப் போட்டுக் கொண்டு கமலாலயத்தில் காத்துக்கிடக்கிறார்கள், என உதயநிதி பேசினார்.