வழிப்பறி கும்பல் கொடூரச் செயல்.. ஐடி ஊழியருக்கு கத்திக்குத்து !

 

கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கவுதம் (29). இவர், கோடம்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து செய்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி இரவு 10 மணியளவில் வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலையில் உள்ள கடைக்கு சென்று விட்டு, அங்குள்ள ஏழாவது தெரு சந்திப்பு வழியாக தமது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, பைக்கில் வந்த இரண்டு பேர் கவுதமை வழிமறைத்து, அவர் வைத்திருந்த செல்போனை கேட்டு உள்ளனர். ஆனால், கவுதம் செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். மீண்டும் கேட்டபோதும் செல்போனை கொடுக்க மறுக்கவே இரண்டு பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து கவுதம் வயிற்றில் குத்தி உள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வழிந்த நிலையில் கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, இது குறித்த புகாரின்பேரில்ல வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வியாசர்பாடி எம்எம் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (19) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஆகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.