பெரும் பதற்றம்.. பிரபல ரவுடி வீடு புகுந்து படுகொலை.. கும்பல் வெறிச்செயல் !!

 

சிவகங்கை மாவட்டம் வேலூர் பகுதியை சேர்ந்த அழகுபாண்டி (32). இவர் மீது சிப்காட், திருப்பாச்சேத்தி, இளையான்குடி , பூவந்தி, சிவகங்கை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன்காரணமாக அழகுபாண்டி எதிரிகளுக்கு பயந்து ஆந்திரா மாநிலத்தில் குடும்பத்துடன் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளனர்.

அழகுபாண்டி மீதான வழக்கு விசாரணையின் போது தொடர்ந்து அவர் வராமல் இருந்ததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்பாச்சேத்தி காவல்நிலைய வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராக அவர் மதுரை வந்துள்ளார். மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள உறங்கான்பட்டி கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார். அழகுபாண்டி வந்திருந்ததை அறிந்த அவரது எதிராளிகள் அவரை தீர்த்துக்கட்ட திட்டம்போட்டனர்.

அதன்படி அழகுபாண்டி நேற்று இரவு தனது மாமனார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், அதிகாலை 2 மணியளவில் சிலர் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். அழகுபாண்டி கதவை திறந்ததும் அடுத்த விநாடியே சரமாரியாக அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியக வெட்டியும், குத்தியும் கொலை செய்துவிட்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதில் சரிந்துவிழுந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அழகுபாண்டி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக ஒத்தக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த போலீசார் உயிரிழந்த அழகுபாண்டியின் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.