கணவர் தாமதமாக வீட்டுக்கு வருகிறார்.. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு !!

 

கணவர் தாமதமாக வீட்டுக்கு வந்ததால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு சூரத்கல் பகுதியில் ஹரீஷ் - திவ்யா(26) என்ற இளம் தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் செய்துகொண்டனர். திவ்யா அந்தப்பகுதியில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். ஹரீஷ் ஆட்டோ டிரைவர் ஆவார். 

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே சிறுசிறு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர்களிடம் மகிழ்ச்சி குறைந்து சண்டை போக்கு நிலவியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹரீஷ் தனது மனைவி திவ்யாவுடன் பக்கத்து வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தார். நிகழ்ச்சி முடித்துவிட்டு திவ்யா வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனால் ஹரீஷ் செல்லவில்லை. 

நீண்ட நேரமாகியும் ஹரீஷ் வீட்டுக்கு வரவில்லை. போன் செய்தாலும் சரிவர பதில் அளிக்காமல் நிகழ்ச்சி நடைபெறும் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த திவ்யா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இந்த நிலையில் சிறிது நேரத்தில் ஹரீஷ் வீட்டுக்கு வந்தார். அப்போது திவ்யா தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அப்பகுதியினர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக திவ்யாவின் பெற்றோர் சூரத்கல் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் ஹரீஷிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.