அஜித்தை சந்திக்க 8 ஆண்டுகளாக முயற்சிசெய்து சோர்வடைந்து விட்டேன்.. டைரக்டர் வருத்தம்

 

மலையாள திரைப்படம் என்றாலும் தமிழக ரசிர்களை வெகுவாக கவர்ந்தது பிரேமம். இப்படம் தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. அப்படத்தில் நடித்த நிவின் பாலி, சாய் பல்லவி இருவருமே தமிழகத்தில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர். இப்படத்திய இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் நேரம் என்ற நேரடி தமிழ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமானார்.

இந்த நிலையில், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய 'கோல்டு' படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். கோல்டு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கியது. இது குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் முகநூல் பதிவும் வைரலானதும் பின்னர் அவர் அதை நீக்கியதும் குறிப்பிட்டத்தக்கது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அல்போன்ஸ் புத்திரனிடம் கமெண்டில், அஜித்துடன் ஒருப்படம் பண்ணுங்க தலைவா, என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். இதற்கு அல்போன்ஸ் புத்திரன் அளித்த பதில் தான் தற்போது வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது, அஜித் சாரை இதுவரைக்கும் மீட் பண்ண முடியல. நிவின் ஒருமுறை அஜித் சாருக்கு பிரேமம் படம் பிடித்துள்ளதாக கூறியிருந்தார். பிறகு, நான் ஒரு 10 முறை அவரின் வலதுக்கை மற்றும் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் அஜித் சாரை சந்திக்க வேண்டி கேட்டு இப்போது 8 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு வயதாவதற்குள்ளாக அஜித் சாரை பார்த்தால் படம் பண்ணுவேன்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த கேள்வியை கேட்கும்போது எனக்கு எவ்வளவு வலிக்கும் தெரியுமா தம்பி? முயற்சி செய்து செய்து சோர்வடைந்து விட்டேன். நீங்கள் கேட்கும்போது முதலில் கோவம் வரும். பின்னர் நீங்களும் என்னை மாதிரி ஒரு ஏகே ரசிகரென நினைத்து அமைதியாக கடந்து விடுவேன். ஏகே ஸாரை வைத்து படம் எடுத்தால் ஹாலிவுட், கோலிவுட் திரையரங்குகளில் படம் 100 நாள் ஓடும். இதே மாதிரிதான் உலகநாயகன், சூப்பர் ஸ்டார், தளபதியுடனும் என கூறினார்.