தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு வந்த சோதனை….12 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை….

 

தெலுங்கு சினிமாவில் அர்ஜூன் ரெட்டி , கீதா கோவிந்தம், டியர் காமரேட், உள்ளிட்ட படங்களில் நடித்து இளம் பெண்கள் மனதை கொள்ளைக் கொண்டவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.. இவர் தெலுங்கு சினிமாவில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களையும் தனது நடிப்பால் கவர்ந்துள்ளார்.  இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் நேற்று அமலாக்கத்துறையினர் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி ரிலீசான இப்படத்தை பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து நடிகை சர்மி தயாரித்து இருந்தார்.லைகர் படத்தை தயாரிக்க ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. லைகர் படத்தை தயாரிக்க சந்தேகத்திற்குரிய வழிகளில் தயாரிப்பாளருக்கு பணம் கிடைத்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சர்மி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர்.

இதன்தொடர்ச்சியாக நேற்று படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவும் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜாரானார். அவரிடம்    அமலாக்கத்துறையினர் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அமலாக்கத்துறை விசாரணை குறித்து அவர் கூறியதாவது, "பிரபலமானவராக இருப்பதால் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும், சில பிரச்சனைகள் மற்றும் பக்க விளைவுகள் இருக்கும். இது ஒரு அனுபவம், இது தான் வாழ்க்கை. நான் என் கடமையை செய்தேன். நான் இங்கு வந்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தேன். அவர்கள் என்னை மீண்டும் அழைக்கவில்லை" என்று தெரிவித்தார்.