அரசு மருத்துவமனையில் அலட்சியம்!! மருத்துவர்கள் இல்லாததால் செக்யூரிட்டி சிகிச்சை பார்த்த அவலம்!!  

 

மருத்துவர்கள் சிகிச்சை பார்த்தாலே சமயத்தில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதிலும் தற்போது தவறான சிகிச்சைகள் குறித்த குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. அப்படி இருக்க ஆம்பூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாததால் செக்யூரிட்டி சிகிச்சை பார்த்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நேதாஜி சாலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் உள் மற்றும் வெளி நோயாளிகளாக  சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மோதகப்பள்ளி பகுதியை சேர்ந்த ஊராட்சியில் துய்மைப் பணியாளராக பணிபுரியும் சாரங்கபாணி என்பவர் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் மருத்துவமனையில் காவலராக வேலை செய்யக்கூடிய நபர் ஒருவர் சிகிச்சை அளிப்பதும் அதே நேரத்தில் அவருக்கு குளுக்கோஸ் போடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து சாரங்கபாணியின் மனைவி அளித்துள்ள பேட்டியில், தனது கணவர் உடல்நிலை குறைவால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து இரண்டு நாள்கள் ஆகியும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் யாரும் வந்து சிகிச்சை அளிக்கவில்லை ,  உடல்நலம் பாதிப்பு அதிகமாக உள்ளது என செவிலியர் இடம் தெரிவித்தால் மாத்திரை அளிக்கிறேன் அதை போடுங்கள் என அலட்சியமாக பதில் அளிக்கிறார். என்று கூறினார்.    அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் யாரும் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதும் இதனால்  மருத்துவமனை காவலர் சிகிச்சை பார்த்த சம்பவமும்   ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது