ஆர்டர்லி முறை…. மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை….

 

சிஆர்பிஎஃப் வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி ஆடர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர் முத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கடந்த 2004-ம் ஆண்டு காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலை பார்த்தபோது எனது உயர் அதிகாரி தன்னை ஆடர்லி வேலை பார்க்க உத்தரவிட்டார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன்.

காவலர் பணிக்கான அனைத்து வேலைகளும் செய்யத் தயாராக இருந்தேன். உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ஆடர்லியாக பணிபுரிய மறுத்ததால், பழிவாங்கும் நோக்கில் என்மீது குற்றச்சாட்டுகளைக்கூறி பணி நீக்கம் செய்யப்பட்டேன். எனவே, எனது பணி நீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்திய அரசியலமைப்பு சட்டபிரிவு 21, மனிதர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. அதன்படி, காவலரை ஆர்டர்லியாக பணியாற்ற வற்புறுத்துவது கண்ணியத்திற்கு எதிராக உள்ளது.

எனவே ஆர்டர்லியாக பணியாற்ற மறுத்த காவலர் முத்துவை பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, அவருக்கு ஓராண்டுக்கு ஊதிய குறைப்பு தண்டனையுடன் பணி வழங்க உத்தரவிட்டார். ஆர்டர்லி முறையை ஒழித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஆர்டர்லி முறையை பின்பற்றுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்டர்லியாக பயன்படுத்தப்பட்ட காவலரின் ஊதியத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என மத்திய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.