பத்மஸ்ரீ விருது பெறும் தமிழக பாம்பு பிடி வீரர்கள்.. யார் இந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ?

 

இந்தியாவின் 74ஆவது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 26 பேருக்கு 2023ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது அறிவித்து மத்திய அரசு கௌரவித்துள்ளது.

வயிற்றுப்போக்கு காலரா போன்றவற்றிற்கு தீர்வு அளிக்கும் ORS solution கண்டுபிடித்து உலக அளவில் 5 கோடி உயிர்களை காப்பாற்றிய மேற்கு வங்கத்தை சேர்ந்த மருத்துவர் திலிப் மஹலனபிலிஸ்க்கு மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கௌரவம் செய்துள்ளது.

அதேபோல் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று விஷ தன்மை வாய்ந்த பாம்புகளை பிடித்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாசி சடையன் கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இதுவரை கணக்கில்லாத அளவிற்கு அதிக பாம்புகளை பிடித்துள்ளேன். தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அதிக விஷத்தன்மை உடைய பாம்புகளை பிடித்துள்ளேன். அதிக விஷம் கொண்ட நாகமான ராஜநாகம், பிட்டிக் கோப்ரா எனும் நல்லபாம்பு ஆகிய பாம்புகளை பிடித்த அனுபவம் உள்ளது.

எங்கள் தந்தையார் காலத்தில் இருந்தே பாம்பு பிடிக்கும் அனுபவம் எங்ளுக்கு உண்டு. எங்கள் தந்தையார் காலத்தில் பாம்புகளை உயிரோடு பிடிக்க வேண்டும் என்ற சட்டம் வந்ததால் நாங்கள் பாம்புகளை உயிரோடு பிடிக்க கற்றுக்கொண்டேன். வடிவேல் கோபால் கூறுகையில், ரொம்ப சந்தோஷம், ரொம்ப மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர்.

பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ள வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.