நெகிழ்ச்சி! வருஷத்துக்கு ரூ.47 லட்சம் சம்பளம்! முழு பார்வை குறைபாடுள்ள இளைஞருக்கு மைக்ரோசாப்ட்ல வேலை!

 

சிறு வயதில் இருந்தே முழு பார்வை திறன் குறைபாடுள்ள இளைஞருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் யாஷ் சோனகியா (25). இவர் 8 வயதாக இருந்த போது பார்வையை முற்றிலும் இழந்தவர். பி-டெக் பட்டப் படிப்பை முடித்துள்ள இவர் ‘ஸ்கிரீன் ரீடர்’ மென்பொருளின் உதவியோடு கோடிங் கற்றுள்ளார். பின்னர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். 

ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு முடிந்த பின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்துள்ளது. அதன் படி யாஷ் சோனகியாவுக்கு பெங்களூருவில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகம் ஆண்டுக்கு ரூ. 47 லட்சம் சம்பளத்துடன் வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது. 

விரைவில் யாஷ் சோனகியா மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் வேலையில் இணைய இருக்கிறார். தற்போதைய நிலையில் அவர் வீட்டில் இருந்தே வேலை செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் அனுமதித்துள்ளது. 

இது குறித்து யாஷ் தந்தை யாஷ்பால் கூறுகையில், ‘என் மகன் எட்டு வயதை எட்டிய போது கண் பார்வையை இழந்தான். ஆனால் அவன் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற அவனது கனவுக்கு நாங்கள் நம்பிக்கை அளித்தோம். யாஷ் என் மூத்த மகன். நானும் அவனுக்காக கனவு கண்டேன். ஒரு தொழில்முறை மென்பொருள் பொறியியலாளராக வேண்டும் என்ற அவரது கனவு பல போராட்டங்களுக்குப் பிறகு இறுதியாக நனவாகியுள்ளது’ என தெரிவித்தார்.