மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. ரூ.90,000 வரை ஊதிய உயர்வு !

 

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக விலைவாசி உயர்வையும் மக்கள் சந்திப்பர். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 7ஆவது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 31ஆம் தேதி, மத்திய தொழிலாளர் அமைச்சகம், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களை (ஏஐசிபிஐ) வெளியிட உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தின் AICPI புள்ளிவிவரங்கள் 132.5. ஆக இருந்தது. அதுவே டிசம்பர் மாதத்திற்கும் ஒரே மாதிரியான குறியீட்டு எண்கள் இருந்தால், அகவிலைப்படி 3% உயரும் என்று கணிக்கப்படுகிறது.

இதன் விளைவாக, தற்போது 38 சதவீதமாக அகவிலைப்படி, 41 சதவீதமாக அதிகரிக்கும். அதாவது, உங்கள் அடிப்படை சம்பளத்தில் 41% DA கிடைக்கும். இது ஜனவரி 2023 முதல் பொருந்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம், சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என பார்த்தால், பணவீக்கம் தொடர்பான AICPI புள்ளிவிவரங்களின் அடிப்படையில் DA அதிகரிப்பு தீர்மானிக்கப்படுகிறது. இப்போது டிஏவில் 3 சதவீதம் அதிகரிப்பு என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்த அடிப்படையில் பார்த்தால், 2.50 லட்சம் சம்பளம் உள்ள கேபினட் செயலர் மட்டத்தில் பணிபுரியும் மத்திய அதிகாரிகளின் சம்பளம், 7,500 ரூபாய் உயர்த்தப்படும். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு ரூ.90,000 அதிகமாக பெறுவார்கள். அதே நேரத்தில் மாதம் ரூ.30,000 சம்பளம் வாங்கும் ஊழியர்களின் சம்பளம் ரூ.900 உயர்த்தப்படும். இந்த உயர்வு ஆண்டுக்கு ரூ.10,800 ஆக இருக்கும்.