மனநோயாளியை சித்தர் என கூறி பண வசூலில் ஈடுப்பட்ட கும்பல்!!  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!!

 

 

தமிழகத்தில் சாமியார்கள், சித்தர்கள் என சொல்லிக்கொண்டு பலர் உலா வருகிறார்கள். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை சித்தர் என்று சொல்லி ஒரு கும்பல் பண வசூலில் ஈடுப்பட்ட சம்பவம் கரூரில் அரங்கேறியுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பகுதிக்கு மக்கள் 10 ஆண்டுகளுக்கு முன் வந்த மனநலம் பாதித்த ஒருவர், யாராவது கொடுக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையின் மீடியனில் அரளி செடி ஓரத்தில் படுத்து உறங்கிக்கொண்டு காலத்தை கழித்து வந்தார்.

 

திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்னர், நாகம்பள்ளி பிரிவு சாலை ஓரத்தில் புறம்போக்கு நிலத்தில் ஒரு குடிசை போட்டு, முதியவரை அங்கு கொண்டுவந்து சிலர் விட்டுள்ளனர். அதன்பின்னர் உடல் முழுவதும் திருநீறு பூசப்பட்ட நிலையில் அந்த முதியவர் காணப்பட்டார். நிர்வாண சித்தர், தகர கொட்டாய் சித்தர், மலைக்கோவிலூர் சித்தர் என அவர் பற்றி தகவல்கள் பரவ, பக்தர்கள் வருகை, உண்டியல் வசூல் என அந்த இடமே பரபரப்பானது.   இந்நிலையில் மனநலம் பாதித்தவரை வைத்து சிலர் பண வசூலில் ஈடுபடுவதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினருக்கு தன்னார்வலர்கள் புகார் அளித்தனர்.

அதன்பேரில் மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர், வட்டாட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தகர கொட்டகைக்கு விரைந்து சென்று அங்கு உடல்நலம், மனநலம் பாதித்த நிலையில் இருந்த முதியவரை மீட்டு கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்டவரை வைத்து பண வசூலில் ஈடுப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.