மாப்பிள்ளைக்கு எதுவுமே தெரியவில்லை.. திருமணத்தை நிறுத்திய இளம்பெண் !!

 

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கொத்வாலி என்ற கிராமத்தில் இளம்பெண் ஒருவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த இளைஞருடன் ஜனவரி 19ஆம் தேதி திருமண விழா நடைபெற இருந்தது. இருவீட்டாரும் திருமணத்திற்கு தடபுடலாக ஏற்பாடு செய்து அதற்கான சடங்குகள் நடைபெற்றன. முதல் நாள் மாலையில் மாப்பிள்ளை குதிரையில் ஏற்றி திருமண ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து இரவும் பல சடங்குகள் நடத்தப்பட்டது.

திருமணத்துக்கு முன்பாக மாப்பிள்ளை அதிகம் படித்தவர், தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பதாகவும், கைநிறைய சம்பளம் வாங்குவதாகவும் மாப்பிள்ளை வீட்டார் கூறியுள்ளனர். ஆனால், மணப்பெண்ணின் சகோதரருக்கு மாப்பிள்ளை மீது சந்தேகம் வந்துள்ளது. மாப்பிள்ளை படித்தவரா, நல்ல வேலையில் உள்ளவரா அல்லது நம்மிடம் பொய் சொல்லி திருமணம் செய்கிறார்களா என யோசித்துள்ளார். அதை தீர்த்துக்கொள்ள புதிய யுக்தியை கையாண்டார்.

அன்றைய இரவு மணமக்களுக்கு புரோகிதர் தர்வாச்சார் என்ற சடங்கை செய்து வைத்துக்கொண்டிருந்தார். அந்த புரோகிதரிடம் பெண்ணின் சகோதரர் பல ரூ.10 நோட்டுகளையும், நாயணங்களையும் கொடுத்து இதை மணமகனிடம் கொடுத்து எண்ணிகக் காட்ட சொல்லுங்கள் என்றுள்ளார். புரோகிதரும் பணத்தை மணமகனிடம் கொடுத்தார்.

அங்கு கூடியிருந்தவர்கள் இதனை விளையாட்டாக எடுத்துக்கொண்டபோதும், பெண்ணின் சகோதரருக்கு உண்மை தெரிந்தது. கொடுத்த பணத்தை மணமகன் சரிவர எண்ண முடியாமல் திணறியுள்ளார். இதை பார்த்து மணப்பெண்ணின் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். தான் படித்த பையன் என்று மணமகன் பொய் கூறியது குடும்பத்தாருக்கு உறுதியானது. இந்த விஷயத்தை அறிந்த மணப்பெண்ணும், படிப்பறிவு இல்லாத நபரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே மணமகனின் வீட்டார் காவல்துறையிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து போலீசார் சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், அதற்கு பலன் கிடைக்கவில்லை. மணமகனின் வீட்டார் தான் உண்மையை மறைத்துவிட்டனர். எனவே,பெண் இந்த நபரை திருமணம் செய்து கொள்ளமாட்டார் என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.