மிரட்டும் கொரோனா.. வட கொரியாவில் ஊரடங்கு அமல் !

 

உலகம் முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் கொரோனா நோய்த் தொற்று பரவத்தொடங்கியது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்று பாதிப்பால் இழப்பை சந்தித்த நிலையில், மக்கள் கொத்து கொத்தாக உயிரிந்தனர். ஆனால், வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தொடக்கம் முதலே கூறிவந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு முதல்முறையாக வடகொரியாவில் கொரோனா நோய் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், ஆகஸ்ட் மாதமே கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தி வென்றதாக வடகொரியா அறிவித்தது. ஆனால், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவில் கொரோனா தொற்று தாக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வடகொரியா உண்மையை மறைப்பதாகவும் குற்றம்சாட்டின.

இதனிடையே, உலகம் முழுவதும் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, இப்போது மெல்ல மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது மக்களிடையே கொரோனா அடுத்த அலை குறித்த பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாள்களாகவே வடகொரியாவின் பியோங்யாங் நகரில் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால், கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் பியோங்யாங் முழுவதும் இன்றுமுதல் 5 நாள்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் வெப்பநிலையை பரிசோதனை செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பியோங்யாங் நகரை தொடர்ந்து வடகொரியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.