சோகம்!!  திருமணமான   இரண்டே   நாளில்  புதுமணப்   பெண்   சாலை   விபத்தில்   உயிரிழப்பு!!

திருச்செங்கோடு  அருகே  சாலை  விபத்தில்  புதுமணப்  பெண்  உட்பட  மூன்று  பேர்  உயிரிழந்துள்ளனர்.

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நெய்க்காரப்பட்டி சிவசக்தி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் ஜீவிதா ஆகியோருக்கு கடந்த திங்கட்கிழமை திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதிகளான இவர்கள் எழுமாத்தூரில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலுக்கு பொலிரோ ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல்லைச் சேர்ந்த சுரேஷ் , மற்றும் சுப்பிரமணியம்  ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருச்செங்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

 இந்நிலையில் பரமத்தி வேலூர் சாலையில் புளியம்பட்டி சுரக்காய் தோட்டம் அருகே இருசக்கர வாகனமும் பொலிரோ ஜீப்பும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோரமான விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் கால் துண்டாகி உடல் பாகங்கள் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல் பொலிரோ காரில் வந்த புதுமணப்பெண்ணான ராமகிருஷ்ணன் மனைவி ஜீவிதா (21) என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.

 இறந்து போன ஜீவிதாவுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் கடந்த திங்கள் கிழமை அன்று தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் ஆகி இரண்டு நாளில் கோயிலுக்கு செல்ல காரில் வந்து கொண்டிருந்தபோது நேர்ந்த இந்த விபத்தில் கணவன் கண்ணெதிரிலேயே ஜீவிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி மூன்று பேரின் உடல்களும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திருச்செங்கோடு ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.