திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்.. வேன் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி !

 

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்கள் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிறுவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ள படூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு, சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்றிரவு இரவு வேளச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக படூர் கிராமத்திலிருந்து, பெண்ணின் உறவினர்கள் மினி வேன் மூலம் வேளச்சேரி நோக்கி வந்தனர். அந்த வேனில் சுமார் 25 பயணித்தனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் , மதுராந்தகம் அடுத்த கருங்குழி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென வேனின் பின்பக்க டயர் வெடித்ததால் வேன் நிலை தடுமாறியது.‌

இதனால் வேகமாக இழுத்துச்செல்லப்பட்ட அந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் கோகுல் ( 14), அஜித் (17), சபிதா (12) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தார். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இச்சம்பவத்தால், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து மதுராந்தகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண நிகழ்ச்சிக்காக சென்ற வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.