"என்னை காப்பாத்துங்க" போனில் கண்ணீருடன் அலறிய 16 வயது மாணவி.. .காதலனின் அதிர்ச்சி செயல்!
கொல்கத்தாவில் காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய 16 வயது சிறுமியை, பணத்திற்காக விபச்சார விடுதியில் விற்க முயன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம், ஷபிகுல் மொல்லா (20) என்ற வாலிபர் காதல் வார்த்தைகள் கூறி பழகி வந்துள்ளார். காதலனின் ஆசை வார்த்தைகளை நம்பிய அந்த சிறுமி, சம்பவத்தன்று பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
கொல்கத்தா விபச்சார விடுதி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதை உணர்ந்த சிறுமி, உடனடியாகக் காவல் உதவி எண் மற்றும் குழந்தைகள் உதவி எண்ணைத் தொடர்புகொண்டு, “என்னைக் காப்பாற்றுங்கள்” என கண்ணீருடன் கதறியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், சிறுமி குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்று அவரைப் பத்திரமாக மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாகச் சிறுமியின் காதலன் ஷபிகுல் மொல்லா (20) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சஹருல் லஸ்கர் (39) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்துப் போக்ஸோ மற்றும் மனிதக் கடத்தல் சட்டங்களின் கீழ் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.