திருச்செந்தூரில் வெள்ளை யானை வீதி உலா... பக்தர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்!
தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு வெள்ளை யானை வீதி உலா வந்தது பக்தர்களை ஆரவாரம் செய்து மகிழ்ச்சியில் திளைக்க செய்தது.
ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மாா்களில் ஒருவரான சுந்தரமூா்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தாா் என்பது ஐதீகம். இதை நினைவுகூரும் வகையில், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும், தொடா்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன.
மாலையில், கோயில் யானையின் உடல் முழுவதும் மாவு பூசி வெள்ளை நிறத்தில் யானையும், தங்கசப்பரத்தில் சுந்திரமூா்த்தி நாயனாரும் கோயிலில் இருந்து புறப்பட்டு சந்நிதி தெரு, உள் மாடவீதி, ரதவீதிகளில் உலா வந்து மீண்டும் கோயில் சோ்ந்தனா். தொடா்ந்து, கோயில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவா் சந்நிதியில் வெள்ளை நிற யானை முன்பு சேரமாள் பெருமானும், சுந்தரமூா்த்தி நாயனாரும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுத்தனா். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.