நடுரோட்டில் மனைவியை குத்திக்கொன்ற வாலிபர்... பொள்ளாச்சியில் பரபரப்பு!
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் ஆத்திரத்தில் நடுரோட்டில் மனைவியை கணவன் குத்திக் கொன்ற சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதி(27). பெயிண்டரான இவரது மனைவி ஸ்வேதா(26). தனியார் கடை ஒன்றில் வேலைக்கு சென்று வருகிறார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு கிரேஷ்(9), கேப்ரியல்(7) என 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஸ்வேதாவின் நடத்தையில் பாரதிக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குழந்தைகளுடன் ஸ்வேதா வசித்து வந்த நிலையில் நேற்று பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று விட்டார்.
பின்னர் வீடு திரும்பிய அவர் வேலைக்கு புறப்பட்டு ரோட்டில் நடந்து சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பாரதி, ஸ்வேதாவை வழிமறித்து தன்னுடன் வருமாறு அழைத்ததாக தெரிகிறது. அதற்கு சுவேதா மறுக்கவே, 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்து ஸ்வேதா புறப்பட்டு சென்றார். விடாமல் பிந்தொடர்ந்து நடுரோட்டில் தகராறில் ஈடுபட்ட பாரதி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவை குத்த முயன்றார்.
இதில் அதிர்ச்சி அடைந்து ஸ்வேதா கூச்சலிட்டதும், அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் தடுக்க முயன்றபோது கத்தியை காட்டி பாரதி மிரட்டினார். உடனடியாக இது குறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையததிற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் திடீரென ஸ்வேதாவின் வயிறு உள்பட பல இடங்களில் பாரதி கத்தியால் குத்தினார். வலி தாங்க முடியாமல் அலறித்துடித்த ஸ்வேதா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். எனினும் ஆத்திரம் தீராத பாரதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஸ்வேதாவை அருகில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் தள்ளி கழுத்தில் கால் மற்றும் கை வைத்து நெரித்தார். இதனால் சிறிது நேரத்தில் ஸ்வேதா பரிதாபமாக உயிரிழந்தார்.அதன் பின்னர் ஸ்வேதாவின் உடலை எடுத்து சாலையில் போட்டு விட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் பிடித்து, அங்கு வந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், ஸ்வேதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கொலை செய்ததாக அவர் கூறினார். இதையடுத்து ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!