பயங்கரம்... சரக்கு லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து...10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை எவரும் சற்றும் எதிர்பாராத ஒரு கோர வாகன விபத்து நிகழ்ந்துள்ளது. லக்கிம்பூரிலிருந்து ஈசானகர் நோக்கிப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு பயணிகள் வேன் மீது, எதிரே அதிவேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தின் வீரியம் காரணமாகப் பயணிகள் சென்ற வேன் முற்றிலும் நசுங்கி உருக்குலைந்தது.
இந்தக் கொடூர விபத்தில் வேனுக்குள் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். படுகாயமடைந்த பலரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களின் பலரது உடல்நிலை தற்பொழுது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய சரக்கு லாரியின் ஓட்டுநரைப் போலீசார் தற்பொழுது தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட பனிமூட்டம் அல்லது லாரி ஓட்டுநரின் அதிவேகக் கவனக்குறைவே இந்த மாபெரும் விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் 10 உயிர்களைப் பலிவாங்கிய இந்தத் துயரச் சம்பவம் இணையதளப் பக்கங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.