முகத்தில் ஆசிட் ஊற்றி இளம்பெண் கொடூரக் கொலை...!  

 

 

பெரியபாளையம் அருகே உள்ள குப்பம் தொட்டாரெட்டி கிராமத்தில் வெள்ளக் குளம் அருகில் உள்ள வயல் வெளி அருகே இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். அவரது முகம் ஆசிட் ஊற்றி சிதைக்கப்பட்டு இருந்ததுடன் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயமும் காணப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஊதுக்கோட்டை போலீசுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

இந்தச் சோகச் சம்பவத்தில் கொலையுண்ட பெண் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் அருகே நின்ரை, சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருணா (40) என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை அருகே உள்ள பதட்டூர் கண்டிகை கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகள் யார் மற்றும் கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் முகம் முழுவதும் எரிக்கப்பட்டது போல் கருப்பு கிரீஸ் பூசப்பட்டிருந்ததுடன் அவர் அணிந்திருந்த தாலி மற்றும் கம்மல் உள்ளிட்ட நகைகள் அப்படியே உள்ளன. சம்பவ இடத்தின் அருகில் கிடந்த செல்போன் ஒன்றை போலீசார் கைப்பற்றி அதன் மூலம் குற்றவாளிகளைத் தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். பெண் கொடூரமாக ஆசிட் ஊற்றி படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.