நில அபகரிப்பு புகார் - அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை கவுதமி நேரில் ஆஜர்!

 

நில அபகரிப்பு புகார் மற்றும் நிதி முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்காக பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான கவுதமி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

நடிகை கவுதமியின் நிலங்களை போலியான ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக சிவகங்கை மாவட்ட தொழிலதிபர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நில அபகரிப்பு மற்றும் அதில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்திற்கு வந்த நடிகை கவுதமியிடம் அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தி, ஆவணங்கள் குறித்த வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்டனர்.