"3 விவாகரத்துகளுக்குப் பின் இப்போ தான் நிம்மதியா இருக்கேன்!" - நடிகை மீரா வாசுதேவன் மனம் திறந்த பேட்டி!
பிரபல நடிகை மீரா வாசுதேவன் தனது திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்துகள் குறித்து அண்மையில் பகிர்ந்துள்ள உருக்கமான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பால் முத்திரை பதித்தவர் நடிகை மீரா வாசுதேவன். 'உன்னைச் சரணடைந்தேன்', 'ஜெர்ரி' போன்ற தமிழ்ப் படங்களிலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் 'தன்மாத்ரா' போன்ற வெற்றிப் படங்களிலும் நடித்தவர். திரையுலகில் வெற்றி பெற்றாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு சவால்களைக் கொண்டதாக இருந்தது. மீரா வாசுதேவன் மூன்று முறை திருமணம் செய்து, மூன்று முறையும் விவாகரத்தில் முடிந்தது. தனது இந்தத் திருமண முறிவுகள் மற்றும் தற்போதைய மனநிலை குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் மிகவும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
தனது வாழ்க்கைப் பயணம் குறித்து அவர் கூறுகையில், "வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும் ஒரு தெளிவைத் தருகிறது. நான் கடந்து வந்த பாதையில் கற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால், நாம் நமக்கான இடத்தில் நிம்மதியாக இல்லையென்றால், வெளியே மற்றவர்களிடம் இருந்து அங்கீகாரத்தை எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவோம்.
நமது நிம்மதி நம்மிடமே இருக்க வேண்டும். எப்போது நாம் மற்றவர்களிடம் அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறோமோ, அப்போது மற்றவர்கள் நம்மைப் பற்றிச் சொல்வதுதான் நமது 'உண்மை' என்று நாம் நம்பத் தொடங்கிவிடுவோம். அது மிகப்பெரிய தவறு," என்று மிக ஆழமான கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
மூன்று விவாகரத்துகளுக்குப் பிறகு, இப்போது தான் மனதளவில் மிகவும் நிம்மதியாகவும், சுயமாகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மற்றவர்களின் விமர்சனங்களுக்குச் செவிசாய்க்காமல், தனது மனசாட்சிக்கு உண்மையாக வாழ்வதே தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மீரா வாசுதேவனின் இந்தப் பேச்சு, விவாகரத்து என்பது ஒரு வாழ்க்கையின் முடிவு அல்ல, அது ஒரு புதிய தொடக்கமாகவும் இருக்கலாம் என்பதையும், சுயமரியாதை எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்த்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மீரா வாசுதேவன் தற்போது மலையாளச் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான 'குடும்பவிளக்கு' தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.