அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணிநீக்கம்!
கோவை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு விதிகளை மீறி நியமிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களைப் பணிநீக்கம் செய்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் 54 பேர் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், இந்த நியமனங்கள் அரசு நடைமுறைகள் மற்றும் விதிகளைச் சரியாகப் பின்பற்றாமல் முறைகேடாக மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இத்துஷ்பிரயோகம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
உயர் நீதிமன்றத்தின் விசாரணை மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், விதிகளை மீறிப் பணியில் சேர்ந்த 54 இளநிலை உதவியாளர்களையும் பணிநீக்கம் செய்து கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.