உஷார்... தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் (H1N1) தீவிர பரவல் - மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரிப்பு!
தமிழகத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே H1N1 வகையைச் சேர்ந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு வேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சமும் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டமும் அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் வெறும் 19 ஆக இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 339 ஆகக் கடுமையாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாகத் தலைநகர் டெல்லியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்திலும் பரவல் வேகம் எடுத்துள்ளது. லேசான காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி மற்றும் உடல் சோர்வு ஆகியவை இதன் முதன்மை அறிகுறிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ளுமாறு பொதுமக்களுக்குச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.