பயத்தினால் கொலை செய்தேன்... 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 7 வயது சிறுமியைக் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பாரடைஸ் நகரில் ஏதெனா ஸ்டிரான்ட் என்ற சிறுமி தனது வீட்டின் முன்பிருந்து மர்மமான முறையில் மாயமானார். இது குறித்துப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சிறுமியின் வீட்டிற்குப் பார்சல் வழங்க வந்த ஒப்பந்த ஓட்டுநர் டானர் ஹார்னர் என்பவர் சிறுமியைக் கடத்திச் சென்றது அம்பலமானது.
கடத்தப்பட்ட 2 நாட்களுக்குப் பிறகு சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தனது வாகனத்தால் சிறுமி மீது மோதிய ஹார்னர், தான் பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் ஹார்னரின் வாகனத்தில் இருந்த கேமரா மற்றும் ஆடியோ பதிவுகள் குற்றத்தை நிரூபிப்பதற்கான முக்கிய ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.
குற்றவாளி ஹார்னர் சமூகத்திற்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பார் என்பதால் அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பு வாதிட்டது. கொலையாளியின் தரப்பில் ஆயுள் தண்டனை கோரப்பட்ட போதிலும், குற்றத்தின் கொடூரத் தன்மையை ஆராய்ந்த நீதிபதிகள் டானர் ஹார்னருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தனர். இந்த நீதியான தீர்ப்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கும் அந்தப் பகுதி மக்களுக்கும் ஓரளவிற்கு ஆறுதலைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.