யூரியாவுக்கு மாற்றாக அமோனியா... மத்திய அரசு அனுமதி!
இந்தியாவில் யூரியா உரத்தின் இறக்குமதியைப் பெருமளவில் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. விவசாயத் துறையில் யூரியா உரத்திற்குப் பதிலாக அமோனியாவை நேரடியாகப் பயன்படுத்த அனுமதி வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் விவசாய உற்பத்தியை உயர்த்தவும், உரங்களுக்கான இறக்குமதிச் செலவைக் கணிசமாகக் குறைக்கவும் இந்த நடவடிக்கை உதவும். அரசின் இந்த புதிய கொள்கை முடிவு நாட்டின் வேளாண் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமோனியாவில் 82% நைட்ரஜன் சத்து நிறைந்துள்ளதால் பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். குறைந்த அளவிலான அமோனியாவைப் பயன்படுத்தும் போதே பயிர்களுக்கு அதிகளவிலான சத்துக்கள் எளிதில் சென்றடையும். தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் உபரி அமோனியாவை விவசாயம் மற்றும் உர உற்பத்திக்குப் முன்னுரிமை அளித்துப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் உரச் செலவு குறைவதுடன் மண்ணின் உற்பத்தித் திறனும் கணிசமாக அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
உலக அளவில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் விவசாயத்தில் அமோனியாவை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் அமோனியாவை விவசாயத்தில் பயன்படுத்தும் உலகளாவிய 4-வது நாடாக இந்தியா இணைந்து சாதனை படைத்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அமோனியாவை நிலத்தில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த அதிரடி முயற்சி நாட்டின் விவசாயிகள் மத்தியிலும் வேளாண் வல்லுநர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளது