பகீர்!! மருமகள் மீது ஆசிட் வீச்சு!! தூங்கிக் கொண்டிருந்த போது மாமியார் கொடூரம்!!

 

இன்னும் எத்தனை காலங்கள் ஆனாலும் மாமியார் , மருமகள் சண்டை ஓயவே ஓயாது. அவளும் நம்மை போன்ற ஒரு பெண் தான் என்ற எண்ணம் மாமியாருக்கும், நம் தாயை போல் இவர்களும் ஒரு தாய் என்ற எண்ணம் மருமகளுக்கும் வருவது இன்றளவும் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. எத்தனையோ தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த காலத்திலும், தனிக்குடும்பங்கள் பெருகிவிட்ட இக்காலத்திலும் சுயமாக தன்னையும், தன் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள தயாராகிவிட்ட இந்த காலத்திலும் மாமியார் கொடுமைகள் தொடர்ந்து வருவது வேதனை தான்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் - கடலூர் சாலையில் வசித்து வருபவர் முகேஷ்ராஜ். இவருக்கும் கிருத்திகா (23) என்பவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. முகேஷ்ராஜ் அவிநாசியில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாயார் ஆண்டாள் (55). இவருக்கு இவரது மருமகள் கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கிருத்திகா இன்று அதிகாலையில் வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டு கழிவறையில் இருந்த ஆசிட்டை எடுத்த வந்த மாமியார் ஆண்டாள், உறங்கிக் கொண்டிருந்த கிருத்திகா மீது ஊற்றினார். இதில் முகம், கண், காது, உடல், மர்ம உறுப்புகளில் ஊற்றினார். மேலும், கொசு விரட்டி மருந்தை வாயில் ஊற்றி கிருத்திகாவை கொலை செய்ய முயற்சி செய்தார். 

அப்போது கிருத்திகாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, கிருத்திகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்த போது ஆசிட் ஊற்றப்பட்டதால் கிருத்திகாவின் வலது கண் பார்வை இழந்ததை கண்டறிந்தனர். 

இதையடுத்து கிருத்திகாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய புதுவை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் கிருத்திகாவின் மாமியார் ஆண்டாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.