ரூ.58 லட்சம் மதிப்பிலான பீர் சரக்குகள் திருட்டு; போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரே நாளில் கைவரிசை!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பீர் விற்பனை மையத்தில் இருந்து சுமார் 40,000 பவுண்ட் எடையுள்ள பீர் பாட்டில்கள் மற்றும் கேன்கள் மர்மமான முறையில் திருடப்பட்டுள்ளது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற ‘பாப்ஸ்ட் புளூ ரிப்பன்’ நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் சரக்கைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்குத் தகுந்த சன்மானம் வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கலிபோர்னியா மாண்ட்லெயார் பகுதியில் உள்ள மையத்தில் கடந்த 17-ஆம் தேதி மர்ம நபர்கள் துணை ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் போல நடித்துப் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். காலை 10 மணியளவில் அரிசோனா செல்ல வேண்டிய 45,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பீர் லோடு கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் சான் டியாகோ செல்ல வேண்டிய 25,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பீர் கேன்களும் கடத்தப்பட்டன.
ஒரே நாளில் மொத்தம் 70,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான பீர் சரக்குகள் கைமாறியுள்ளன. இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்துப் பீர் தயாரிப்பு நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "திருடரே... உங்களிடம் இவ்வளவு பீர் இருப்பதை உங்கள் நண்பர்களிடம் பெருமையாகக் காட்ட நினைப்பதில் தவறில்லை; ஆனால் நேர்மையாகப் பெற்றிருக்கலாம்" என கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளது.