உஷார்... காற்றழுத்த தாழ்வு பாதையால் தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..
தெற்கு குஜராத் முதல் மத்திய கேரளா வரையிலான கடல் மட்டத்தில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தின் மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், கனமழையும் பெய்யக்கூடும் என்பதால் அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி உள்ளிட்ட இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
மலை மாவட்டங்களைத் தவிர்த்து மாநிலத்தின் ஏனைய பகுதிகளில் நிலவக்கூடிய வானிலை நிலவரம். தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய யூனியன் பிரதேசப் பகுதிகளிலும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒருசில இடங்களில் லேசான மழையை எதிர்பார்க்கலாம். தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.