உஷார்.. கத்தி முனையில் 7 சவரன் நகை பறிப்பு - 3 மணி நேரத்தில் சிக்கிய கொள்ளையன்!
தூத்துக்குடியில் கத்தி முனையில் பெண்ணிடம் 7 சவரன் நகை பறித்த மர்ம நபரை, போலீசார் சினிமா பாணியில் துரிதமாகச் செயல்பட்டு 3 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி கதிர்வேல்நகரைச் சேர்ந்தவர் சிவகமலா (48). இவர் நேற்று மதியம் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, மதியம் சுமார் 3 மணியளவில், மர்ம நபர் ஒருவன் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்துள்ளான். சிவகமலாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய அந்த நபர், அவர் அணிந்திருந்த 7 சவரன் தங்கத் தாலிச் செயினை (மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம்) பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினான். தப்பியோடிய அந்த நபர், சிறிது தூரம் சென்ற பிறகு அங்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஒருவரை மிரட்டி, தன்னை பழைய பேருந்து நிலையத்தில் விடுமாறு கேட்டுள்ளான். அதிர்ஷ்டவசமாக, அந்த இருசக்கர வாகனத்தில் வந்தது விரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆவார்.
அந்த நபர் மீது சந்தேகம் கொண்ட பிரேம்குமார், சாமர்த்தியமாக அவரை வண்டியில் ஏற்றிக்கொண்டே ரகசியமாகச் சிப்காட் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக போலீசார் விரைந்து சென்று அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில் சிவகமலாவிடம் பறிக்கப்பட்ட 7 சவரன் நகை மீட்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் தென்காசி மாவட்டம் தேவிபட்டினத்தைச் சேர்ந்த சசிகுமார் (30) என்பது தெரியவந்தது. இவர் தூத்துக்குடியில் தங்கி சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார். நகை பறிப்பு சம்பவம் நடந்த 3 மணி நேரத்திற்குள்ளாகவே துரிதமாகவும், சாமர்த்தியமாகவும் செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், முத்துமாலை மற்றும் போலீசாரைத் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மதன் வெகுவாகப் பாராட்டினார்.