“போட்றா வெடிய... 121 தொகுதிகளில் தவெக ஜெயிக்கும், 41% வாக்குகள் கிடைக்கும்” - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் வெற்றி குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்பில், நடந்து முடிந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 41 சதவீத வாக்குகளைப் பெறும் என அவர் கணித்துள்ளார். ஒரு புதிய கட்சி தனது முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வாக்கு சதவீதத்தைப் பெறும் என்ற கணிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது முற்றிலும் தனது சொந்த முயற்சியால், முறைப்படி சர்வே செய்து பெறப்பட்ட தனிப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த முடிவுகளைப் பகிர்ந்த அவர், "கமெண்ட் செக்ஷனில் யாரும் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்" என நகைச்சுவையாகவும் அதே சமயம் உறுதியாகவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே தவெக தலைவர் விஜய், "முடிவு எதுவாக இருந்தாலும் மக்களைச் சந்திப்பேன்" எனத் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ள சூழலில், காவல்துறை பின்னணி கொண்ட ஒருவரின் இந்த 41% வாக்கு கணிப்பு தவெக ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வமான முடிவுகள் இன்னும் இரண்டு நாட்களில் தெரியவரும் என்பதால் அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது.