பாஜக தலைமை அலுவலகம் மீது குண்டு வீச்சு... பஞ்சாப்பில் பரபரப்பு.. காலிஸ்தான் பயங்கரவாதி பொறுப்பேற்பு!

 

பஞ்சாப் மாநிலத் தலைநகர் சண்டிகரின் செக்டர் 37 பகுதியில் அமைந்துள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை கையெறி குண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மாலை சரியாக 5 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு மர்ம நபர்கள் பாஜக அலுவலகத்தின் வாசலுக்கு வந்துள்ளனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த கையெறி வெடிகுண்டை அலுவலகத்தை நோக்கிக் குறிவைத்து வீசினர்.

குண்டு விழுந்தவுடன் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்தக் குண்டு வீச்சுத் தாக்குதல் நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே, காலிஸ்தான் பயங்கரவாதி சுக்கிந்தர் சிங் பாபர் இதற்குப் பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் அமைதியைக் குலைக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சண்டிகர் காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள், வெடித்த குண்டின் துகள்களைச் சேகரித்தனர். பைக்கில் தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் சண்டிகரில் உள்ள முக்கிய அரசியல் கட்சி அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.