பகீர்... பிரிட்டன் பெண்மணியின் மூளையில் 38 ஒட்டுண்ணி முட்டைகள் !
பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் வசித்து வருபவர் லோரி டென்மேன் என்ற பெண்மணி, கடந்த 2007 ம் ஆண்டு தனது தோழியுடன் 2 மாதப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். பயணத்தின் போது வயிற்று உபாதைகள் ஏற்படக் கூடாது என்பதற்காக, அவர் அசைவ உணவுகளை முழுமையாகத் தவிர்த்து தீவிர சைவ உணவுகளை மட்டுமே உட்கொண்டுள்ளார். இருப்பினும் பிரிட்டன் திரும்பிய சில காலத்திலேயே அவருக்குத் தொடர்ச்சியாகப் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் மற்றும் அசதிகள் ஏற்படத் தொடங்கின.
கடந்த 2010 ம் ஆண்டில் அவரது உடலில் இருந்து ஒரு மீட்டர் நீளமுள்ள பெரிய நாடாப்புழு வெளியேறியதைக் கண்டு அவர் கடுமையான அதிர்ச்சியடைந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்குக் கடுமையான வலிப்பு, மனநல பாதிப்புகள் மற்றும் உடம்பில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியதால் மருத்துவர்கள் தீவிரமாகப் பரிசோதித்தனர். அப்போது அவரது மூளையில் 38 ஒட்டுண்ணிப் புழுக்களின் முட்டைகள் உறைந்த நிலையில் இருப்பதைக்கண்டு மருத்துவக் குழுவினர் ஒட்டுமொத்தமாக உறைந்து போயினர்.
அசுத்தமான குடிநீர் மற்றும் சரியாகக் கழுவப்படாத பச்சைக் காய்கறிகள் மூலமாகவே இந்த டேனியா சோலியம் என்ற நாடாப்புழுவின் முட்டைகள் மனித உடலுக்குள் நுழைகின்றன. இந்த அபாயகரமான நியூரோசிஸ்டிசர்கோசிஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள லோரி டென்மேன், இந்தியாவில் பயணிக்கும் போது சுகாதாரத்தில் அணுஅளவும் அலட்சியம் காட்டக் கூடாது எனப் பிற நாட்டுப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் பயணிப்போர் எப்போதும் காய்ச்சிய குடிநீரைப் பயன்படுத்த வேண்டும் என்றும் சாலையோர உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.