#BREAKING: மடப்புரம் அஜித் வழக்கில் சிபிஐ விசாரணையில் விடை கிடைக்கவில்லை - வழக்கை முடிக்க ஒப்புதல் - நிகிதா பரபரப்பு பேட்டி!
மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய மடப்புரம் அஜித் வழக்கில், புகார்தாரர் தரப்பில் ஆஜரான நிகிதா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, வழக்கை முடித்துக்கொள்ள ஒப்புக் கொண்டதாக கூறி, வழக்கை முடித்துக் கொள்வதற்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் வழக்கை முடித்து வைக்க சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது குறித்து நிகிதா அளித்த பேட்டியில், “இந்த வழக்கு தொடர்பாகச் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். குறிப்பாக, நகை அடகு கடைகளில் கூட விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. விசாரணையின் முடிவில், "நகை தொலைந்தது உண்மைதான்" என்பதை சிபிஐ உறுதி செய்துள்ளது. ஆனால், அந்த நகைகள் எங்கே உள்ளன அல்லது யாரால் திருடப்பட்டது என்பது குறித்த எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
கார் சாவியை ஒருவரிடம் கொடுத்ததால் அவர் மீது சந்தேகம் எழுந்து புகார் அளிக்கப்பட்டது. ஆனால், விசாரணைக்குப் பிறகுதான் அந்த நபருக்குக் கார் ஓட்டவே தெரியாது என்ற உண்மை தெரியவந்துள்ளது. மேலும் பார்க்கிங் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது புலனாய்வுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.
ஆதாரங்கள் இருந்தும் வழக்கை ஏன் தொடரவில்லை என்பதற்கு நிகிதா, “இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் முதலில் புகார் அளித்தவர் தற்போது உயிரோடு இல்லை. வயது முதிர்ந்த தாயாரை வைத்துக் கொண்டு வேலைக்குச் செல்லும் சூழல் இருப்பதால், தொடர்ந்து நீதிமன்றத்திற்கு அலைவது கடினம் என நிகிதா தெரிவித்துள்ளார். ஒருவேளை நகைகள் கிடைத்தால் கூட, அதை உரிமை கோர முடியாத ஒரு சூழலே தற்போது நிலவுகிறது.
"இவ்வளவு காலம் போராடியும் சரியான விடை கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் இருந்தாலும், எதுவுமே உயிரை விடப் பெரிதல்ல. அமைதியான வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்பதால், வழக்கை முடித்துக் கொள்ள நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.