undefined

BREAKING: மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்... பிரதமர் உட்பட தலைவர்கள் இரங்கல்!

 

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான முகுல் ராய், கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று பிப்ரவரி 23ம் தேதி அதிகாலை 1:30 மணியளவில் அவர் காலமானார்.

கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக அவரது மகன் சுப்ரான்ஷு ராய் தெரிவித்துள்ளார். அவர் கடந்த சில நாட்களாகக் கோமா நிலையில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே டிமென்ஷியா (மறதி நோய்) மற்றும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார்.

முகுல் ராயின் அரசியல் வாழ்க்கை வியத்தகு மாற்றங்கள் நிறைந்தது. 1998-ல் மமதா பானர்ஜியுடன் இணைந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. கட்சியின் பொதுச் செயலாளராகவும், மமதாவின் வலது கரமாகவும் நீண்ட காலம் செயல்பட்டார்.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சியில் மத்தியக் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சராகவும், பின்னர் 2012-ல் மத்திய ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்தார். மமதா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2017-ல் பாஜகவில் இணைந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2021 தேர்தலுக்குப் பிறகு மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். இருப்பினும், உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

முகுல் ராயின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். "தன்னுடைய நீண்ட கால அரசியல் சகாவையும், பல போராட்டங்களில் உடன் நின்ற போர்வீரனையும் இழந்துவிட்டேன்" என மமதா பானர்ஜி உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க அரசியலில் தந்திரமான நகர்வுகளுக்குப் பெயர் பெற்ற முகுல் ராயின் மறைவு, அம்மாநில அரசியலில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.