கோர விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து... 15 பேர் உடல் நசுங்கி பலி, ஜம்மு காஷ்மீரில் சோகம்!

 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று காலை ஒரு பயணிகள் பேருந்து மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பேருந்து ராம்நகர் பகுதியிலிருந்து உதம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

allowfullscreen

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், ராணுவத்தினரும் மற்றும் காவல்துறையினரும் இணைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பலரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்தவர்களை விமானம் மூலம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பேருந்து அதிவேகமாகச் சென்றதே இந்த விபத்துக்குக் காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.