பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற முடியுமா? அரசு விளக்கம்

 

கடந்த 2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ₹500 மற்றும் ₹1000 நோட்டுகளை மீண்டும் மாற்றிக்கொள்ளலாம் எனப் பரவி வரும் தகவல்களால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதனை மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு செய்திக்குறிப்பில், பழைய நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி புதிய காலக்கெடுவை வழங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து ஆய்வு செய்த PIB Fact Check குழு தெரிவித்துள்ளதாவது: பழைய செல்லாத நோட்டுகளை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கி எந்த ஒரு புதிய அறிவிப்பையும் வெளியிடவில்லை.

2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வழங்கப்பட்ட அவகாசம் நீண்ட நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. இனி எக்காலத்திலும் அந்தப் பழைய நோட்டுகளை வங்கிகளிலோ அல்லது ரிசர்வ் வங்கியிலோ மாற்ற இயலாது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு பழைய நோட்டுகளை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதேபோல், தற்போது புழக்கத்தில் உள்ள புதிய ₹500 நோட்டுகள் 2026 மார்ச் மாதத்திற்குப் பிறகு ஏடிஎம்களில் கிடைக்காது எனப் பரவிய மற்றொரு செய்தியையும் அரசு அண்மையில் மறுத்திருந்தது. தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து ₹500 நோட்டுகளும் சட்டப்படி செல்லும் என்றும், அவற்றில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே, வாட்ஸ்அப் அல்லது முகநூல் வாயிலாக வரும் இத்தகைய அதிகாரப்பூர்வமற்ற நிதிச் செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்த்து உண்மையை உறுதிப்படுத்துமாறும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.