"எனக்கு கேன்சர்... உதவுங்க!"... 71 லட்சத்தை அபேஸ் செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இளம்பெண் கதறல்!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலை பகுதியில், தனக்கு உயிர்கொல்லி நோயான புற்றுநோய் இருப்பதாகக் கூறி பலரிடம் 71 லட்ச ரூபாய் வரை வசூலித்த இளம்பெண் தற்போது போலீசில் சிக்கியுள்ளார். சமூக வலைதளங்களில் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு, தனது சிகிச்சைக்காகப் பணம் தேவைப்படுவதாகக் கூறி பொதுமக்களின் அனுதாபத்தை அந்தப் பெண் அறுவடை செய்துள்ளார். இதனை நம்பிய பலரும் தங்களால் இயன்ற பெரும் தொகையை அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு வாரி வழங்கியுள்ளனர்.
ஆனால், மக்களிடம் வசூலித்த அந்தப் பணத்தைக் கொண்டு அந்தப் பெண் தனது நோய்க்குச் சிகிச்சை பெறாமல், விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் சொகுசு வாகனங்களை வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பெண்ணிற்கு எவ்விதமான புற்றுநோயும் இல்லை என்பதும், அவர் போலியான மருத்துவச் சான்றிதழ்களைக் காட்டி மோசடி செய்ததும் கையும் களவுமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் அவரைக் கைது செய்தபோது, "சினிமா நடிகை போல வாழ வேண்டும் என்ற ஆசையால்தான் இப்படிச் செய்தேன்" என்று அவர் கூறிய வார்த்தை அதிகாரிகளையே அதிர வைத்துள்ளது. கைதான அந்தப் பெண்ணிடமிருந்து சொகுசு கார்கள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் வரும் இது போன்ற உருக்கமான பதிவுகளைத் தீர விசாரிக்காமல் பணம் அனுப்ப வேண்டாம் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.