கார் தீப்பிடித்து எரிந்து விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழப்பு!
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கார் தீப்பிடித்து எரிந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தங்கரை பள்ளிவாசல் சாலையில், கார் ஒன்று முழுமையாக எரிந்த நிலையில் இருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயணம் செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தின் காரணமாகவே கார் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்பட்டாலும், உயிரிழப்புகள் மற்றும் விபத்தின் பின்னணி குறித்துத் துல்லியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
சம்பவ இடத்திற்குத் தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கார் எரிந்ததற்கான அறிவியல் ரீதியான காரணங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்து நடந்த இடத்தில் காவல்துறை உயரதிகாரிகள் முகாமிட்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.